சேமமுற வேண்டுமெனில் தெருவெல்லாம் தமிழ் முழக்கம் செழிக்கச்செய்வீர்

ஞாயிறு, ஆகஸ்ட் 19, 2012

தமிழ்த்தாய் அறக்கட்டளை, தஞ்சாவூர் – தமிழ் இலக்கியப்பயணம் – 2012



கடந்த 06.08.12 அன்று, தஞ்சாவூர், தமிழ்த்தாய் அறக்கட்டளையினர், தமிழ் இலக்கியப்பயணம் மேற்கொண்டு, தாய்த்தமிழகத்திலிருந்து கப்பல் மூலம் அந்தமானுக்கு வருகை தந்திருந்தார்கள்.

அந்தமான் தமிழர் சங்கத்தில் கடந்த 07.08.2012 செவ்வாய்க்கிழமையன்று மாலை 4 மணியளவில் தஞ்சாவூர் தமிழ்த்தாய் அறக்கட்டளையினர்,  ராஜபாளையம், ராஜுக்கள் கல்லூரியின் தமிழ்த்துறைத் தலைவர் முனைவர். க.அழகர் அவர்கள் தலைமையில் திருக்குறள் தேசிய கருத்தரங்கம் நடைபெற்றது. உலகப்பொதுமறை திருக்குறளில் உள்ள வாழ்வியல் கருத்துக்களை, பேராளர்கள் அழகுத்தமிழில் எடுத்துரைத்தனர்.

அந்தமான் தமிழர் சங்கத்திற்கு இரண்டு அடி உயரமுள்ள ஐம்பொன்னால் செய்யப்பட்ட, சுமார் ஒரு லட்ச ரூபாய் மதிப்பிலான தமிழ்த்தாய் சிலை வழங்கும் விழா நடைபெற்றது. சிலை அழகோ அழகு. காணக்கண் கோடி வேண்டும். இரண்டு வருடங்களுக்கு முன் உயர்திரு. வி.ஜி.பி சந்தோசம் அவர்கள் தலைமையில் திருவள்ளுவர் சிலை வழங்கும் விழா நடைபெற்றது. அந்தமான் தமிழர் சங்கத்திற்கு வருகை தந்திருக்கும், சங்கத்திற்கு பெருமையும் அழகும் சேர்க்கும் இரண்டாவது அழகுச்சிலை இது.

இந்தச்சிலை சுவாமிமலை குபேரன் சிற்பக்கலைக்கூடத்தில் திரு.க.மோகன்ராஜ் ஸ்தபதி அவர்களால் உருவாக்கப்பட்டதாம். தமிழ்த்தாய் அறக்கட்டளைக்காக மூன்றாவதாக உருவாக்கப்பெற்ற சிலையாம் இது. இது போன்ற ஐம்பொன் சிலை ஒன்றை கடந்த 05.11.2011 அன்று மலேசியாவிலுள்ள கிள்ளான் தமிழ்ப்பள்ளிக்கு அன்பளிப்பாக வழங்கியுள்ளதாக அறக்கட்டளையின் நிறுவனர் உடையார் கோவில் குணா அவர்கள் தெரிவித்தார். தமிழ்த்தாய் சிலைக்கான செலவுகளை அறக்கட்டளையினரே பகிர்ந்து செய்துவருவதாகவும், வேறெந்த நிதி உதவியும் யாரிடமிருந்தும் பெறுவதில்லை என்றும் தெரிவித்தார்.

தமிழ் மொழியை செம்மொழியாக அறிவிக்கக்கோரி 2003ம் ஆண்டு பாரதத் தலைநகரில் உண்ணாவிரதம் மேற்கொண்டது, பிறகு தஞ்சையில் உண்ணாவிரதம் மேற்கொண்டது, கன்னியாகுமரியில் இருந்து சென்னைக்கு நடைப்பயணம் மேற்கொண்டது, தமிழ்க்கருத்தரங்கங்கள், இலக்கியப்பயணங்கள் மேற்கொள்வது என நீண்டு கொண்டே செல்கிறது இவர்கள் ஆற்றும் தமிழ்ப்பணிகள்.

தஞ்சையில் தமிழ்த்தாய்க் கோட்டம் ஒன்றைக் கட்டிவருவதாகவும், எதிர்காலத்தில் தமிழ்த்தாய் அறக்கட்டளையினர் உலகப்பொது மறை திருக்குறளை தேசிய நூலாக அறிவிக்கக் கோரி போராட்டம் நடத்தப்போவதாகவும் தெரிவித்தார் அறக்கட்டளை நிறுவனர். தமிழ்த்தாய் அறக்கட்டளையினரின் தமிழ்ப்பணிகள் தொடரட்டும்.


புதன், ஆகஸ்ட் 01, 2012

அவள் விகடனின் பயிற்சி முகாம்



விகடன் குழுமம் என்றாலே எழுத்தை சுவாசிக்கும் ஒவ்வொருவருக்கும் ஒரு மயக்கம் உண்டு. சிறுவயது முதலே ஆனந்த விகடன் என்னை பாதித்த அளவு மற்றெந்த வார இதழும் பாதித்ததில்லை. மணமாகி 1991ல் அந்தமான் வந்ததும் ஆனந்த விகடன் தொடர்ந்து கிடைக்காத காரணத்தாலேயே, அந்தமான் வெறுத்தது. பிறகு 2002ல் அவள் விகடன் கிடைத்தது. அன்று முதல் இன்று வரை அவள் விகடனின் தீவிர வாசகியானேன். சமையல் குறிப்பு, அழகுக்குறிப்பையும் தாண்டி, சாதனைப்பெண்கள், தொழில் தொடங்க வழிகாட்டும் கட்டுரைகள், கைவினைப்பொருட்கள் தயாரிப்பு போன்றவை என்னை அவள் விகடனுக்கு அடிமையாக்கின. மற்ற பெண்கள் பத்திரிக்கை படிப்பதும் உண்டு. ஆனாலும் ஒவ்வொரு அவள் விகடன் இதழ் படித்து முடித்ததும் நமது தன்னம்பிக்கையின் அளவு ஒரு அங்குலமாவது உயர்ந்திருக்கும். இதை அவள் விகடனை ஆழ்ந்து படிக்கும் ஒவ்வொரு வாசகியரும் உணர்ந்திருப்பார்கள். நான் அவள் விகடன் வாங்க ஆரம்பித்ததில் இருந்து அத்தனை இதழ்களையும் சேர்த்து வைத்திருக்கிறேன். ஒவ்வொரு இதழிலும் பயிற்சி முகாம் குறித்த அறிவிப்புகளைப் பார்க்கும் போது நாம் தமிழ் நாட்டில் இல்லையே என்று ஏக்கம் இருக்கும். இது ஒரு புறம்.

கடந்த 16ம் தேதி வானொலி நண்பர் வரதராஜனின் தொலைபேசி அழைப்பு. "சாந்தி! அவள் விகடன் இணை ஆசிரியர் வந்திருக்காங்க. நேர்முகம் ஒலிப்பதிவு செய்ய சம்மதம் சொல்லியிருக்காங்க. நீங்க 9 மணிக்கு வரணுமே" என்றார். காலை நேரம் பள்ளிகளுக்கு சத்துணவு தயாரித்து அனுப்ப வேண்டும் என்பதால் காலை 4 மணி முதல் 11.30 மணி வரை காலில் சக்கரம் கட்டிக்கொண்டே ஆக வேண்டும். வேறெந்த வேலையும் ஒப்புக்கொள்ள முடியாது. ஆனால் அவள் விகடன் ஆசிரியரை சந்திக்காமல் விடுவதா? சமையலை முடித்து உதவியாளர்களிடம் பள்ளிக்கு எடுத்து வரப்பணித்து வானொலி நிலையத்திற்கு நிஜமாகவே ஓடினேன். நண்பர் இரண்டு நேர்முகத்தை முடித்திருந்தார். பின் அவள் விகடன் மற்றும் பசுமை விகடன் இணை ஆசிரியர் உயர் திரு. அறிவழகன் ஐயா அவர்களையும், புகைப்பட நிபுணர் உயர் திரு ராஜசேகரன் அவர்களையும் அறிமுகப்படுத்த சந்தோசம் ஒரு நீருற்று போல பொங்கியது. நெருங்கிய உறவினரை சந்தித்தது போல மகிழ்ச்சியான மகிழ்ச்சி. படபடவென பேசிக்கொண்டே இருந்தேன். நேர்முகமும் படபடப்பில் திருப்தியாக இல்லை. தோழியர் என்ன சொதப்பிட்டீங்க? என்று கடிந்து கொண்டார்கள். ஆனால் இணை ஆசிரியர் நிதானமாக அழகாக பதிலிறுத்தார். 

பாக்கு மட்டையில் தட்டுகள், குவளைகள் தயாரிக்கும் பயிற்சியை அளிக்க, தஞ்சை பெரியார் தொழில் நுட்ப வணிகக்காப்பகத்தின் திட்ட இயக்குனர் உயர் திரு. ராமசாமி தேசாய் அவர்களையும், இந்தத் தொழிலை வெற்றிகரமாக நடத்திவரும் திருமதி. நிஷா அவர்களையும் உடன் அழைத்து வந்திருந்தார். அந்தமான் மகளிருக்கு இலவசப்பயிற்சி அளித்து அவர்களைத் தொழில் முனைவோராக உயர்த்த விரும்புவதாக தெரிவித்தார். நீங்கள் எந்தத் துறையில் பயிற்சி பெற விரும்பினாலும் சரி, அதை ஏற்பாடு செய்து தர நாங்கள் காத்திருக்கிறோம் என்றும் உங்கள் தொழிலுக்குத் தேவையான கடனுதவியை NABARD வங்கி மூலம் ஏற்பாடு செய்து தருகிறோம் என்றும் பொறுப்பாக பதில் சொன்னார். (மேற்படி வங்கியிலும் தற்போது மேலாளராக நம்மவர் பதவியில் உள்ளார்). இந்த பயிற்சி முகாமிற்குப் பாலமிட்டவர் அந்தமான் நிக்கோபாரின் கடலோரக்காவல் படைத் தலைவர் உயர்திரு. சோமசுந்தரம் அவர்கள். இந்த பயிற்சி முகாம் குறித்த அறிவிப்பு 17.07.12 இதழில் வெளிவந்திருந்த போதிலும், பயிற்சியே முடிந்துதான் எங்களுக்கு இதழ் கிடைத்தது.

மூன்று பேரின் நேர்முகத்தையும் பொருத்தமான வர்ணனைகளுடன், பாடல்களுடன் ஒலிபரப்பினோம். திருமதி. நிஷா தனது நேர்முகத்தில்,
 " எங்களுக்குத் தேவையான பாக்கு மட்டைகளை பெங்களூரு அருகில் ஒரு கிராமத்தில் இருந்து வாங்கி வருகிறோம்.இங்கு எங்கு நோக்கிலும் பாக்கு, பாக்கு, பாக்கு மரம் தான். அபரிதமான பாக்கு மரங்கள். பாக்கு மட்டைகளும் நல்ல தரமாக உள்ளது. ஏற்றுமதி செய்யும் வாய்ப்பும் உங்களுக்கு அதிகம். இங்கு தொழில் முனைய விரும்புவோர் ஒரு அடி எடுத்து வைத்தால், நூறு அடி கைபிடித்து அழைத்துச்செல்ல ஆட்கள் இருக்கிறார்கள். ஒரு அடி எடுத்து வையுங்கள்" என்று சொல்லியிருந்தார்.

 பொதுவாக இங்கு சுயதொழில் முனைய இளைஞர்களிடையே மிகுந்த தயக்கம் உள்ளது. கடை நிலை ஊழியனாக இருந்தாலும் பரவாயில்லை. அரசு வேலை வேண்டும் என்னும் மனப்போக்கில் தான் இருக்கிறார்கள். உழைப்பதில் தயக்கம், தடைகளைத் தாண்டி போராடும் மனப்பக்குவமின்மை ஆகியனவையே காரணம்.

பயிற்சி பெற்ற நண்பர் ஒருவரை, "உங்க பகுதியில எத்தனை பேரு தொழில் ஆரம்பிக்கப் போறீங்க? என்ற போது அவர் சிரித்தபடி," இது எத்தனையாவதோ பயிற்சி. எத்தனையாவதோ லோன். லோன வாங்கி தண்ணி அடிப்பானுக. வட்டிக்கு விடுவானுக. லோனு தள்ளுபடியானதும் அடுத்த லோனுக்கு அலைவானுக" என்றார். இது எப்படி இருக்கு? இவர்களை என்ன செய்யலாம்?